Lord Siva

Lord Siva

Tuesday 17 January 2012

பெண்களுக்கு வரும் பல நோய்கள்.

 
Posted On Jan 17,2012,By Muthukumar

சுமார் 40 வயதுள்ள பெண்மணி ஒருவர் என்னிடம் ஆலோசனை பெற வந்தார்.நான் கேட்பதற்கு முன்பே அந்தப் பெண்மணியே பேச ஆரம்பித்துவிட்டார். ‘தான் பிறவியிலேயே பயந்த சுபாவம் உள்ளவர் என்றும், தன் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள் பல நோய்களினால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்றும் கூறினார்.

‘தனது பாட்டி ஞபாக மறதி அதிகமாகி Dementia  என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மருந்தே இல்லை என்று மருத்துவர்கள் கூறுவதாகவும் கூறினார். தன் அத்தை (சுமார் 70 வயது) கீழே விழுந்து லேசாக அடிபட்டதும் ஙீஸிணீஹ் எடுத்துப்பார்த்ததில் இடுப்பு எலும்பு முறிந்துள்ளதாகவும், உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தன் தாயார் கர்ப்பப்பை புற்றுநோயினால் இறந்துவிட்டதாகவும், தன்னுடைய சித்தி சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கஷ்டப்படுவதாகவும், தனக்கு தைராய்டு பிரச்னை இருப்பதாகவும்’ மிக்க வேதனையுடன் கூறினார்.

‘‘அதனால் முதுமையில் ஆண்களைவிட பெண்கள்தான் நோய்களினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா?’’ என்று பயத்துடன் கேட்டார்.

முதியோர் மருத்துவர் ‘‘முதுமையில் இருபாலாருக்குமே நோய்கள் வர வாய்ப்புண்டு. ஆனால் பெண்கள் தான் ஆண்களைவிட நீண்டகாலம் வாழ்கிறார்கள். அதற்கான காரணங்கள் - மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஆண்களுக்கே அதிகம். ஆண்களுக்குத்தான் அதிக அளவில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் போன்றவற்றால் பல நோய்கள் வர வாய்ப்பு உண்டு.

பெண்களைவிட ஆண்கள்தான் விபத்துக்களில் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். மனஅழுத்தம் ஆண்களுக்கே அதிகம்’’ என்று சொல்லி, பெண்களுக்கு வயதானகாலத்தில் வரும் நோய்கள் பற்றியும் அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிகளையும் விளக்கினேன்.

வயதான காலத்தில் பெண்களைத் தாக்கும் முக்கிய நோய்கள்:
- மாதவிடாய் நிற்பது (Menopause).
- எலும்பு வலிமை இழத்தல்.
- மாதவிடாய் நின்ற பின்பும் ரத்தப்
போக்கு (Post menopause bleeding)  ஏற்படுதல்.
- இன உறுப்பில் அரிப்பு.
- கருப்பை கீழ் இறங்கல்.
- சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை.
- புற்றுநோய்கள்.
- தைராய்டுத் தொல்லைகள்.
- அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia)
 - உடற்பருமன் மற்றும் மலச்சிக்கல்.
மாதவிடாய் நிற்பது (Menopause)  எந்த வயதில் ஏற்படுகிறது? அதனால் ஏதும் தொல்லைகள் உண்டா? எல்லோருக்கும் இம் மாதிரியான பிரச்னைகள் வர வாய்ப் புண்டா?

மாதவிடாய் முழுமையாக சுமார் 45 - 50 வயதில் நின்று விடும். சிலருக்கு 40 - 50 வயதில் நின்று விடும். சிலருக்கு 40 - 45 வயதிலேயே நிற்க வாய்ப்புண்டு. ஓவரியிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் குறைவதால் மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால் சில தொல்லைகள் வர வாய்ப்புண்டு. அதாவது சில பெண்களுக்கு மாதவிடாய் நின்றவுடன் உடல் பெருக்க ஆரம் பிக்கும். முகம் அடிக்கடி சிவந்து சூடாக இருக்கும். மனநிலையில் திடீர் திடீரென்று மாற்றம் ஏற்படும். அதாவது படபடப்பு, பயந்த நிலை, மனச்சோர்வு மற்றும் பலவீனம் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புண்டு.

இவர்களுக்கு தூக்கத்திலும் பிரச்னை உண்டு. படுத்த உடனே தூக்கம் வராது. இடையிடையே விழித்துக் கொள்வார்கள். சில பேருக்கு விடியற்காலையிலேயே தூக்கம் கலைந்துவிடும்.

இரவில் வியர்த்துக் கொட்டல், தோல் சுருக்கம், பிறப்புறப்புகளில் வறட்சி, எரிச்சல், அரிப்பு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற தொல்லைகள் வரலாம். மேலும் எலும்பு பலவீனம் அடைந்து எளிதில் முறிவு ஏற்பட வாய்ப்புண்டு.

மேற்கூறிய தொல்லைகள் எல்லாப் பெண்களுக்கும் வரவேண்டிய அவசியம் இல்லை.

மாதவிடாய் நிற்கும் போது வரும் தொல்லைகளுக்கு தக்க சிகிச்சை உண்டா?

முதலில் கணவன் மற்றும் குடும்பத்தினரை அழைத்து அவர்களிடம் இத்தொல்லைகள்பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். குடும்பத்தினர், மாதவிடாய் நிற்பதால் பாதிக்கப்பட்ட பெண் களிடம், அவர்களின் மன நிலைக்குத் தகுந்தவாறு நடந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்து உடற் பருமனைக் குறைக்க வேண்டும். தியானம், யோகாசனப் பயிற்சி, உடலுக்கும், மனதிற்கும் மிக நல்லது.

சில பெண்களுக்கு மருந்துகளைக் கொடுக்கலாம். அதிகம் துன்புறும் பெண்களுக்கு சிறிதளவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரை களைக் கொடுத்து வரலாம். இதில் பக்க விளைவுகள் வரும் வாய்ப்பு இருப்பதால் மாத்திரையை மிகவும் கவனமாகக் கொடுக்க வேண்டும்.

மாதவிடாய் நிற்பதால் ஏற்படும் தொல்லைகள் எல்லாப் பெண்களுக்கும் வருவதில்லை.

சுமார் ஆறு மாதங்களிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அத்தொல்லைகள் தானாகவே சரியாகி விடும். மேலும் அவதியுறும் பெண்களுக்கு மேற்கண்ட சிகிச்சைகள் மூலம் நல்ல குணமளிக்க முடியும்.

எந்த வயதிலிருந்து பெண்களுக்கு எலும்பு வலிமை இழத்தல் ஆரம்பமாகிறது? அதை ஆரம்ப நிலையிலேயே எப்படிக் கண்டறிவது? அதைத் தடுக்கும் முறைகள் என்ன?

பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் (45-50) ஈஸ்ட்ரோஜன் ஹார் மோன் குறைவதால் எலும்பு வலிமை இழத்தல் ஏற்படுகிறது. இது ஆண்களைவிட பெண்களையே அதிகமாக பாதிக்கிறது. இதற்கென்று தனியாகத் தொல்லைகள் ஏதுமில்லை. இந்நோய் பல ஆண்டுகளாக மறைந்திருந்து கடைசியில் எலும்பு முறிவு ஏற்படும் பொழுதுதான் இதன் விளைவே தெரிய ஆரம்பிக்கும். கீழே விழாமலேயே, எவ்வித அடியும் படாமலேயே எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்நோயின் தனித்தன்மை.
முதுமையில் ஒருவருக்கு உயரம் குறையக்கூடாது. அப்படிக் குறைந்தால் இந் நோயினால் அவர்களுடைய முதுகெலும்பு பாதிக்கப்பட்டதாக இருக்கக்கூடும். இதைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை ஏதுமில்லை. எலும்பில் உள்ள பொருள் திணிவு சுமார் முப்பது சதவிகிதம் குறைந்தால்தான் இதை எக்ஸ்ரே மூலம் கண்டறிய முடியும். ஆகையால் எக்ஸ்ரே ஓர் உகந்த பரிசோதனை அல்ல. ஞிமீஜ்ணீ sநீணீஸீ மூலம் இந்நோயை மிக எளிதில் ஆரம்ப நிலையிலேயே கண்டு கொள்ள முடியும்.

தடுக்கும் முறைகள் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியினால் எலும்பை வலிமை அடையச் செய்ய முடியும். அதிகமாக காபி அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மது அருந்துவது, புகைபிடிப்பது ஆகிய வற்றை அறவே ஒழிக்க வேண்டும். தேவையற்ற ஸ்டீராய்டு போன்ற மாத்திரைகளைத் தவிர்த்தல் நல்லது. சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள உணவை தினமும் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உ-ம். ராகி, பால், கீரை, மீன் மற்றும் உலர்ந்த பழங்கள்.
தினமும் 500 மில்லிகிராம் கால்சியம் மாத்திரையை உட்கொள்வது அவசியம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்பும் இரத்தப் போக்கு ஏன் ஏற்படுகிறது? அதன் விளைவு என்ன?
ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் நின்றபிறகு இரத்தப் போக்கு வரவே கூடாது. அப்படி ஏற்பட்டால் கீழ்க்காணும் காரணங்களால் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கருப்பையில் புண் அல்லது நுண்கிருமிகளின் விளைவு (infection).

கருப்பையில் தோன்றும் புற்றுநோய்.
திடீரென்று ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரையை நிறுத்திவிடுவது.
மேற்கண்ட காரணங்களைக் கண்டறிய உடனே மருத்துவரிடம் சென்று தக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகமிக அவசியம்.

ஓரிரு நாட்கள்தானே இரத்தப்போக்கு என்று அலட்சியப்படுத்த வேண்டாம்!
சில வயதான பெண்களுக்கு பிறப்புறுப்பு களில் அரிப்பு ஏற்படுவதாகவும், அவர்கள் டாக்டரிடம் சொல்லத் தயங்குவதாகவும் கேள்விப்பட்டேன். உங்கள் விளக்கம் என்ன?

நீங்கள் கூறியது மிகவும் சரியே. பெண்கள் பலருக்கு பிறப்புறுப்புகளில் அரிப்பு ஏற்படுவது உண்டு. இதை பெண் மருத்துவர்களிடம்கூட சொல்ல சிலர் தயங்குகிறார்கள். அரிப்புக்கு முக்கிய காரணங்கள்:

- பிறப்புறுப்புகளில் நுண்கிருமித் தாக்குதல் (infection).
 - சுத்தமின்மை.
- நீரிழிவு நோய்.
- ஒவ்வாமை (Allergy)
- மருந்தின் தீய விளைவு.
- சத்துணவுக் குறைவு.

மேற்கண்ட காரணங்களைக் கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்க முழுமையான பாசோதனை மிக அவசியம்.

சில பெண்களுக்கு கருப்பை கீழறங்கி விடுவதால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதற்கு என்ன சிகிச்சை உள்ளது?

கருப்பை கீழே இறங்குவதற்கு மூன்று காரணங்கள் முக்கியமானதாகும்.
- குழந்தைகளை அதிகமாகப் பெற்றவர்கள்.
- ஹார்மோன் குறைவாகச் சுரத்தல்.

- முதுமையில் கருப்பையைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைவது.
கருப்பை கீழே இறங்கியிருந்தால் அடிவயிற்றில் ஒருவிதத் தொல்லையும், சிறுநீர் கழிவதில் இடர்ப்பாடும் ஏற்படும். இரத்தப் போக்கும் தோன்றுவதுண்டு கருப்பை மிகுதியாகக் கீழே இறங்கியிருந்தால் நடையும் குறைய வாய்ப்புண்டு. இதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பர். அறுவை சிகிச்சை மூலம் இதனை அகற்றிவிட்டால் பூரண குணமடைய வாய்ப்புண்டு.
ஆண்களைவிட பெண்களுக்குத்தான் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் உண்டா? பெண்களுக்கு வரு புற்று நோய்களை எவ்வாறு தடுத்துக் கொள்வது?

புற்றுநோய் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமாக வருவதற்கு வாய்ப்புண்டு. ஆண்கள் புகைபிடிப்பதாலும், மது அருந்துவதனாலும் நுரையீரல் புற்றுநோயும், கல்லீரல் புற்று நோயும் வர வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், வயிறு, உணவுக்குழல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களுள் மார்பகப் புற்றுநோயே அவர்களை அதிகமாகத் தாக்குகிறது. 70 வயதிற்கு மேலுள்ள பெண்களை இந்நோய் அதிகமாகத் தாக்குவதில்லை. நடுத்தர வயதிலுள்ள பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்நோய் பாரம்பரியமாக வர வாய்ப்பும் உண்டு. இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் பூரண குணமளிக்க முடியும். சிறு கட்டிதானே என்ற அலட்சிய மனப் பான்மையினாலும், டாக்டர்களிடம் சொல்லத் தயங்குவதனாலும் இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடிவதில்லை.

இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய மாதம் ஒருமுறை 40 வயதைக் கடந்த ஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகத்தில் கட்டி ஏதேனும் இருக்கிறதா என்று அவர்களாகவே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். (Breast self examination)ஆண்டுக்கொருமுறை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும். (Breast physical examination) குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்திருந்தால் ஆண்டுக்கு ஒருமுறை Mammography  செய்து கொள்வது நல்லது.

கருப்பை புற்றுநோய் கண்டறிய 40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் PAP smear  பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம்.

இந்த றிகிறி பரிசோதனை தொடர்ந்து மூன்று முறை கெடுதல் ஏதுமில்லை என்று வந்தால், பின்பு மருத்துவரின் ஆலோசனையின்படி தேவைப்படும்போது மட்டும் இப் பரிசோதனையைச் செய்து கொண்டால் போதுமானது.

சில வயதான பெண்களுக்கு ஞாபகமறதி ஏற்படுகிறது. இது முதுமையின் விளைவா? அல்லது இது ஒரு நோயா?

முதுமையில் ஞாபகமறதி என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகவே வரும். ஆனால் 70 வயதைக் கடந்த பெண் களுக்கு அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia) எனும் கொடிய நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதற்கான காரணங்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நோயின் ஆரம்பமே ஞாபகமறதிதான். ஆனால், பழைய நினைவுகள் பசுமையாக இருக்கும். அவர்களின் நடத்தை ஒரு குழந்தையைப் போலவே இருக்கும்.  எடுத்துச் சொன்னாலும் அதைப் புரிந்துகொள்ளும் தன்மை அவர்களுக்குக் கிடையாது. இது மூளையைத் தொடர்ந்து பாதிக்கும் நோய். இதற்குத் தக்க சிகிச்சையும் கிடையாது. அன்பான பராமரிப்பு, உடல் சுகாதாரம், சத்தான உணவு போன்றவற்றை குடும்பத்தார் தாராளமாகக் கொடுத்து உதவ வேண்டும்.

நடுத்தர வயதிலிருந்தே நோயின்றி பெண்கள் ஆரோக்கியமாக வாழ உங்கள் ஆலோசனை என்ன?

நல்ல பழக்கவழக்கத்தினாலும், கட்டுப்பாடான வாழ்க்கை முறை யினாலும், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களினாலும் ஆண்களைவிட பெண்கள் உலக அளவில் நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள். இருப்பினும் இவர்களுக்கு பல நோய்கள் வர வாய்ப்புண்டு. அவற்றை வராமலே தடுத்து ஆரோக்கியமாக வாழ கீழ்க்கண்ட முறைகளை சுமார் 40 வயதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.

1. உடற்பயிற்சி: சுமார் 40 வயதிலிருந்தே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதுமிக மிக அவசியம். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், ஆசனப் பயிற்சி போன்றவை மிக அவசியம். இவற்றைச் செய்ய முடியாதவர்கள், தரையில் படுத்து (floor exercise)  உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி உடற்பருமனைக் குறைத்து எலும்பையும் உறுதிசெய்து மலச்சிக்கலையும் தடுக்கும்.

2. குறைவான ஆனால் நிறைவான உணவு: உண்ணும் உணவின் அளவைக் குறைத்து சத்தான உணவாக உண்ண வேண்டும். உணவில் அரிசியைக் குறைத்து கோதுமை அல்லது ராகியைச் சேர்த்துக் கொள்ளலாம். புரதச்சத்திற்கு பருப்பு வகைகளும், காளானும் சிறந்தது.

தினமும் கீரை மற்றும் பால் மிக மிக அவசியம். பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் உடல் எடையைச் சீராக வைத்திருக்க வேண்டும். 50 வயதிற்கு மேல் உடல் பருத்துவிட்டால் எடையைக் குறைப்பது மிகமிகக் கடினம். வீட்டில் வீணாகும் உணவை உண்ணுவதை அறவே தவிர்க்க வேண்டும். தைராய்டு நோய் உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ளலாம்.

3. மருத்துவ ஆலோசனை : மாதவிடாய்நின்ற பின்பு உடல் திடீரென்று இளைக்கவோ, அல்லது கூடவோ கூடாது. தைராய்டு, நீரிழிவு நோய், மற்றும் புற்று நோய்களினால் இத்தொல்லைகள் வர வாய்ப்புண்டு. முதுமையின் விளைவே என்று அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே மருத்துவரை அணுகவும். எப்பொழுதும் வீட்டு வேலையே செய்து அலுத்துப் போகும் குடும்பப் பெண்களுக்கு ஒரு பொழுது போக்கு மிகவும் அவசியம். இதற்கென தனியாக 1-2 மணி நேரம் தினமும் ஒதுக்குவது நல்லது. உ-ம். தோட்டக்கலை, எம்பிராய்டரிங், தையல்கலை, வானொலி கேட்பது, பார்க் சென்று வருவது மற்றும் கோயில்களுக்குச் செல்வது.

4. தியானம்: இன்றைய காலகட்டத்தில் மன அமைதிக்கு தியானம் ஒரு அருமருந்து. முறைப்படி பயின்று தியானம் செய்தால் மனதில் அமைதி ஏற்படும். உள்ளத்தில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஅழுத்தம், இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, வயிற்றுப்புண் இன்னும் பல நோய்கள் வராமலேயே தடுக்க முடியும்.

மேற்கூறிய ஆலோசனைகளை சுமார் 40 வயதிலிருந்தே பெண்கள் கடைப்பிடித்து வந்தால் முதுமைப் பருவம் பெண்களுக்கு வளமாக அமையும்.

முதுமையில் செக்ஸ் அவசியமா?

சுமார் 65 வயதுள்ள முதியவர் எனது கிளினிக்கிற்கு மிகச் சோர்வுடன் வந்தார். என்னவென்று கேட்டேன்? ‘‘எனக்கு எல்லாம் இருந்தும், தற்பொழுது இல்லாத நிலையில் இருக்கிறேன். நானும், மனைவியும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தோம். குழந்தைகள் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்கள். எவ்வித குடும்ப பாரமுமின்றி வாழ்ந்து வருகிறேன். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவியின் இறப்பு என்னைத் தனிமையாக்கியது. தனிமை, சோர்வு, விரக்தி இச்சூழ்நிலையில் எனக்கு சுமார் 50 வயதுள்ள பெண் அறிமுகமானாள். நண்பர்களாக பழகி, இன்று காதலர்களாக வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் அவளை நெருங்கும்பொழுது என் மனம் மனைவியை நினைவுபடுத்த, பாலுணர்வு குறைகிறது. இதற்காகத் தான் உங்கள் உதவியை நாடி வந்தேன்’’ என்றார்.
நான் அவரை முழுமையாகப் பரிசோதித்து அவருக்கு ஒரே ஒரு மாத்திரையை மட்டும் தேவையான நேரத்தில் உபயோகித்துக் கொள்ளும்படி கூறினேன். சில மாதங்கள் கழித்து, மறுமுறை என்னை மிக்க மகிழ்ச்சியுடன் சந்தித்தார். அவரது பேச்சில் மட்டுமின்றி, நடை, உடை, பாவனையிலும் நல்ல மாற்றம் தெரிந்தது. என் சிகிச்சைக்கு நன்றி கூறி மிக்க மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.

அவர் வந்து போனபின்னர், முதியவர் களுக்கு வரும் செக்ஸ் தொடர்பான பிரச்னைகள் குறித்து பல கேள்விகள் எழத் தொடங்கின.
வயதான காலத்தில் பாலுணர்வு குறையக் காரணம் என்ன? அதற்குத் தக்க சிகிச்சை உண்டா? என்றெல்லாம் பலர் கேட்கத் தொடங்கி விட்டார்கள். அதற்கான பதிலைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

ஒருவரின் இளமைக்கும், நீண்டகாலம் வாழ்வதற்கும் அவருடைய இளம் மனைவிதான் காரணம் என்ற கருத்து நிலவுகிறதே... அதைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

முதுமையில் பாலுணர்வு பற்றி நம் நாட்டினர் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆகையால், அதைப்பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் இத்துறையிலும் தம் கவனத்தைச் செலுத்துவது அவசியமாகும்.

ரஷ்யாவில் பாலுணர்வு பற்றிய ஆராய்ச்சி ஒன்றினை நடத்தினர். எலிகளை ‘அ’ வகுப்பு, ‘ஆ’ வகுப்பு என இரண்டு வகுப்பாகப் பிரித் தனர். ‘அ’ வகுப்பு எலிகளைத் தனியே வைத்து இனச் சேர்க்கையின்றி வாழ வைத்தனர். ‘ஆ’  வகுப்பு எலிகளை இனச்சேர்க்கையோடு வாழ வைத்தனர். சில மாதங்களில் இனச் சேர்க்கையின்றி தனித்து வாழ்ந்த ‘அ’ வகுப்பு எலிகள், உடல்நலம் குன்றி விரைவில் இறந்து விட்டன. இனச்சேர்க்கையோடு வாழந்த ‘ஆ’ வகுப்பு எலிகள் உடல்நலம் குன்றாமல்  நெடுநாட்கள் வாழ்ந்தன.
இதனால் பாலுணர்வு உடலுக்கு கெடுதல் செய்வதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

முதுமையில் ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்பு களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி யும், அக்காலத்தில் ஏற்படும் பாலுணர்வு பற்றியும் விவரமாக கூறவும்....

ஆண்களுக்கு வயது ஆக ஆக ஆண்குறி சற்று சிறிதாகிக் கொண்டே வரும். விறைப்புத் தன்மையும் குறையும். உச்சகட்ட நிலையை அடைவதற்கு நீண்ட நேரம் ஆகும். விந்து நீர்த்துப்போகும். ஆனால் அதன் வீரியத்தன்மை குறையாது.

பெண்களுக்கு சுமார் 40-50 வயதில் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் குறையத் தொடங்கும். அப்பொழுது மாதவிடாய் நிற்கும். இனப்பெருக்க உறுப்பின் அளவு சிறிதாகும். ஈரத்தன்மை குறையும். விரியும் தன்மையும் குறையும். மார்பகங்களும் சரியும். அவற்றின் பருமனும் குறையும். ஆனால், முழுமையாகக் குறையாது. வயதான பெண்கள் பாலுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட தன்னுடைய தோற்றத்திற்கும், அழகிற்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆண், பெண் இருவரின் பாலுணர்வும் அவர் களுடைய வயது, உடல் நலம் மற்றும் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறதுமுதுமையில் பாலுணர்வு குறைவதற்கு நோய்கள் ஒரு காரணமா?

முதுமை பல நோய்களின் மேய்ச்சல் காடு. ஆகையால், 70% முதியவர்களுக்கு பாலுணர்வு குறைவதற்கு நோய்களே ஒரு முக்கிய காரணமாகும். ஆண்களின் வீரியத்தன்மை குறைவதற்கு நீரிழிவு நோய் ஒரு முக்கிய காரணமாகும். மாரடைப்பு நோய் உள்ளவர்கள் சுமார் 3 மாதங்களுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டாமென்று டாக்டர்கள் கூறுவார்கள். அதன்பிறகு டாக்டரின் ஆலோசனையின்படி செக்ஸை தொடரலாம். இருதயம் பலஹீனமானவர்களுக்கும் (heart failure) பாலுணர்வு குறையும். அதற்கு தக்க சிகிச்சை தர வாய்ப்புண்டு. உயர்இரத்த அழுத்தமுள்ளவர்கள் வழக்கம்போல் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க கொடுக்கும் மாத்திரைகளினால் பாலுணர்வு குறையலாம்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலுணர்வு குறையாது. ஆனால், அதைச் செயல்படுத்துவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் பாலுணர்வு குறையும். மூட்டு வலிகளினாலும் செக்ஸை செயல்படுத்தமுடியாத நிலை ஏற்படலாம். மற்றும் ஆஸ்துமா, உடற்பருமன் போன்ற தொல்லை களினால் பாலுணர்வு சரியாக இருந்து, அதனை செயலாற்ற முடியாத நிலை ஏற்படும்.

ஆண்-பெண் இன உறுப்புகளில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை மூலமும் பாலுணர்வு குறைய வாய்ப்புண்டு. (உ.ம்) கர்ப்பப்பை அறுவை சிகிச்சை, மார்பக அறுவை சிகிச்சை, பிராஸ்டேட் சுரப்பி அறுவை சிகிச்சை. மேலும் மனச் சோர்வினாலும் (Depression)  பாலுணர்வு மிகுந்த அளவில் குறையும்.

மருந்து உட்கொள்வதால் பாலுணர்வு குறையுமா?
முதுமையில் பல நோய்களுக்கு பல மருந்துகள். அந்த மருந்துகளினாலும் பாலுணர்வு குறைய வாய்ப்புண்டு.

மனநோய்க்குக் கொடுக்கும் மருந்து, விறைப்புத் தன்மையையும், விந்துவை வெளியேற்றும் சக்தியையும் வெகுவாகக் குறைக்கும். தூக்க மாத்திரை பாலுணர்வு ஆசையைக் குறைக்கும். மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மருந்து, இருதய நோய்க்குக் கொடுக்கும் மருந்து இவற்றினாலும் பாலுணர்வு குறையும்.

மதுவை அளவுக்கு அதிகமாக அருந்துவதால் பாலுணர்வு குறைய வாய்ப்புண்டு (80%). மதுவை நிறுத்திவிடுவதன் மூலம், பாலுணர்வு பழைய நிலைக்கு வர வாய்ப்புண்டு.

பெண்களுக்கு மாதவிடாய் இருப் பதுபோல் (விமீஸீஷீஜீணீusமீ) ஆண்களுக்கு ஏதேனும் உண்டா?

பெண்களுக்கு சுமார் 45-50 வயதில் மாதவிடாய் முழுமையாக நின்றுவிடுகிறது. இது அவர்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் ஏற்படுகிறது. இச்சமயத்தில் சில பெண்களுக்கு மனச்சோர்வு உண்டாகி செக்ஸில் ஈடுபடுதல் குறையும். இதைப் போலவே ஆண்களுக்கும் சுமார் 55-60 வயதில் Testosterone எனும் ஹார்மோன் குறைவதால், Male menopause அல்லது Andropause எனும் நிலை அவர்களுள் ஒரு சிலருக்கு ஏற்படும். இவர்களுக்கு உடல் சோர்வு, தூக்கமின்மை, விரக்தி மற்றும் செக்ஸில் திடீரென்று ஈடுபாடு குறைவு போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. பலர் இது முதுமையின் விளைவே என்று அலட்சியப்படுத்தி துன்புறுகிறார்கள். ஆனால், ‘இது முதுமையின் விளைவு அல்ல. ஹார்மோன் குறைவினால் ஏற்படும் தொல்லையே’ என்று எங்களைப் போன்ற முதியோர் மருத்துவர்களால் எளிதில் கண்டறிந்து, அதற்குத் தகுந்த ஹார்மோன் சிகிச்சை மூலம் பூரண குணமளிக்க முடியும்.

ஆண்களுக்கும் மாதவிடாய் உண்டா?  ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டீரோன் குறைவினால் ஏற்படும் விளைவுகள் முதுமையில் பாலுணர்வு குறைகிறது. இதற்கென்று சிறப்பு வைத்தியம் ஏதேனும் உண்டா?

முதுமையில் பாலுணர்வு குறைவதற்கு பல நோய்களும் அதற்குக் கொடுக்கும் மருந்துகளுமே முக்கிய காரணமாகின்றன. ஆகையால், அந்நோய்களுக்கு (உ.ம். நீரிழிவு நோய்) தக்க சிகிச்சை அளித்தாலே  பாலுணர்வு பழைய நிலைக்கு வர வாய்ப்புண்டு. இதைப் போலவே நோய்களுக்குக் கொடுக்கும் மாத்திரைகளையும் (உ.ம்: உயர் இரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை) குறைத்தோ அல்லது மாற்றியோ கொடுத்தால் பாலுணர்வு சரியாகிவிடும். பாலுணர்வு குறைய முதுமையில மன அழுத்தம் ஒரு முக்கியமான காரணமாகும். அதைக் கண்டறிந்து, அதற்கு தக்க சிகிச்சை அளித்தால் செக்ஸ் உணர்வு சரியாகி விடும்.
பாலுணர்வை அதிகப்படுத்துவதற் கென்றே ஏதாவது மாத்திரைகள் உண்டா?

உண்டு. முக்கியமாக ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை அதிகரிக்க Sildenafil என்ற மாத்திரையை உபயோகிக்கலாம். இந்த மாத்திரை உடலுறவு கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த மாத்திரையை உபயோகப்படுத்துவதற்குமுன், அவர்களின் உடல்நிலையை முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே இம்மாத்திரையை சிபாரிசு செய்ய வேண்டும். இருதய நோயாளிகள் முக்கியமாக ழிவீtக்ஷீணீtமீ  மாத்திரையை சாப்பிடு பவர்கள் இந்த செக்ஸ் மாத்திரையை அறவே தவிர்க்க வேண்டும். சிலருக்கு இந்த செக்ஸ் மாத்திரையில் குறைந்த ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் வயிற்றுக் கோளாறுகள் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புண்டு.

பாலுணர்வினைப்பற்றி உங்களின் முடிவான கருத்து என்ன?
முதுமையில் பாலுணர்வினை விரும்பி அதனைக் கடைப்பிடிப்பவர் நன்மையே அடைவர். Sexuality for the aged is a good thing, for those who want it.‘

முதுமைக் காதல்’ பற்றி கூறுங்களேன்?

காதலிலே மிக உயர்ந்தது முதுமைக் காதல்தான். ஆம்! இது முற்றிலும் உண்மை! ஏனெனில் இங்கு உடலுறவுக்கு முக்கியத்துவம் இல்லை. உள்ள உணர்வுகள் பரிமாறப்படுகின்றன. வாய்கள் பேசாது. கண்கள் உணர்ச்சியை கொட்டும். உடல் அசைவுகள் மூலம் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படும். இருவரின் இடைவெளி இங்கே முக்கியமில்லை. ஒருவரின் வாழ்க்கைத் துணையோடு 30-40 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்து கடைசிக்கட்டத்தில் இருக்கும் ஒரே துணை, வாழ்க்கைத்துணையே! இவர்களில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டால்கூட அது அடுத்தவரை  வெகுவாகப் பாதிக்கும். மிக அன்னியோன்யமான தம்பதியரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றொருவர் அவர் இறந்த ஒருசில வருடத்திற்குள்ளேயே இறந்துவிடுவது நடைமுறையில் நாம் பார்க்கும் ஒரு நிகழச்சியே. ஆகையால் ‘முதுமைக் காதல்’ தான் உன்னதமானது, புனிதமானது!

நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

சுமார் 65 வயதுள்ள புதிய நோயாளி ஒருவர் என்னைச் சந்தித்து, தன்னுடைய உடலை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ளவும், அவருக்குள்ள பல சந்தேகங்களை என்னிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவும், எனது கிளினிக்கிற்கு ஒருநாள் வந்தார். அவரை முழுமையாகப் பரிசோதனை செய்து விட்டு, அவ ருடைய உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளைப்பற்றி விசாரித்தேன். அப்பொழுது, ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து அதிலுள்ள மாத்திரைகளை என் டேபிள் மேல் கொட்டினார்.

சுமார் 20க்கும் மேற்பட்ட மாத்திரைகளை தினமும் சாப்பிடுவதாக அறிந்தேன். அதில் தேவையற்ற டானிக் மற்றும் தூக்க மாத்திரைகளைச் சாப்பிடுவதையும் கண்டறிந்தேன். தூக்க மாத்திரையை நிறுத்தி விடும்படி கூறியதற்கு முதலில் ஆட்சேபம் தெரிவித்தார். பின்பு, மாத்திரையின்றி நல்ல தூக்கம் வருவதற்கான பல வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தேன். அதைத் தவறாமல் பின்பற்றி, இரண்டு வாரம் கழித்து எனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினேன். நான் எதிர்பார்த்தது போல, எனக்கு போனில் மகிழ்ச்சியான செய்தி வந்தது. ஆம்! தூக்க மாத்திரையின்றி நன்றாகத் தூங்குகிறாராம்! அது எப்படி? நான் அவருக்குக் கொடுத்த ஆலோசனை என்ன? முதுமையில் தூக்க மின்மையைப்பற்றி பல செய்திகள் உள்ளன. தூக்கம் மனிதனுக்கு அவசியம் என்று தெரியும். ஆனால், முதுமையில் அதன் முக்கியத்துவம் என்ன?

நமது வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்திலேயே கழித்துவிடுகிறோம். 90 வயது அடைந்த முதியவர், தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளை தூக்கத்திலேயே கழித்து விடுகிறார். ஆனால், உயிர் வாழ்வதற்கு காற்று, நீர் ஆகியவை எப்படி அவசியமோ, அது போலவே தூக்கமும் மனிதனுக்கு அவசியம். ஒரு குழந்தை கருப்பை யில் இருக்கும் பொழுது, பிறந்து ஒரு வருடம் ஆகும் வரையிலும், அதிகநேரம் தூக்கத் திலேயே கழிக்கிறது. வயது ஆக ஆக, தூங்கும் நேரமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது.

முதுமையில் ஏற்படும் தூக்கக் கோளாறுகள் என்ன?
50 வயதைத் தாண்டியவர்களுக்கு பலவிதமான தூக்கக் கோளாறுகள் வரலாம். அவை....

- தூக்கத்தின் தரம் குறைந்து விடுதல். 
- ஆரம்ப நிலை தூக்கம் வர அதிக நேரமாதல்.
- ஆழ்நிலை தூக்கம் குறைதல்.
- இரவு நேரங்களில் தூக்கம் விடுபடுதல்.
- அதிகாலையில் விழித்துக்கொள்ளுதல்.
முதுமையில் ஒருவருக்கு இரவில் தூக்கம் குறைந்தாலும், தூக்கத்தின் அவசியம் (need for sleep) குறைவதில்லை.

வயதானால் தூக்கம் குறையும் என்கிறார்களே அது உண்மையா? முதுமை யில் ஒருவருக்குத் தூக்க நேரம் எவ்வளவு தேவைப்படும்?

தூக்கம் என்பது ஒவ்வொருவருடைய உடல் நலம் மற்றும் மன நிலையைப் பொறுத்ததே. ஆனால், முதுமையில் தூக்கம் சற்று குறைவது உண்மையே. தூக்கத்தின் அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபட்டுக் காணப்படும். முதுமையில் சுமார் 5-8 மணி நேரத் தூக்கம் போதுமானதே. தூக்கத்தின் மொத்த நேரத்தைவிட, ஆழ்ந்த தொடர் தூக்கம் (uஸீவீஸீtமீக்ஷீக்ஷீuஜீtமீபீ) தான் மிகவும் முக்கியம்.

புதிய ஆராய்ச்சியின்படி, முதுமைக் காலத்தில் குறைந்த தூக்கம் போதுமென்ற கருத்தை மறுத்துள்ளார்கள். அதாவது, முதுமைக் காலத்தில் ஒருவர் பகலில் செய்யும் வேலையைப் பொறுத்தே அவருடைய தூக்கம் அமைகிறது. பகலில் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு அதிக நேரம் ஆழ்ந்த தூக்கம் தேவைப்படுகிறது. மாறாக, பகலில் பூராவும் படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இரவில் குறைவான தூக்கமே போதும்.

முதுமையில் பலர் நல்ல தூக்கமின்றி சிரமப்படுகிறார்கள். அது ஏன்?
முதியவர்களில் நான்கில் ஒருவர், தூக்கமின்மையால் கஷ்டப்படுகிறார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. சற்று விவரமாகத் தெரிந்துகொள்வோம்.
பல முதியவர்கள் பகலில் நீண்டநேரம் தூங்கி விடுகிறார்கள். அதனால் இரவில் தூக்கம் வருவதில்லை. 

மனம் சார்ந்த கவலைகளினாலும் தூக்கம் குறையும். (உ.ம்) உறவினர்களின் இழப்பு, கடன் தொல்லை, நிதி வசதி குறைவு, கட்டாய ஓய்வு, தனிமை.

மன நோய்கள் (உ.ம்) மன அழுத்தம் (Depression), அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia)  மற்றும் மனப்பதட்டம் (Anxiety).
 முதியவர்கள் உண்ணும் பல மருந்து களினாலும் தூக்கம் தடைபடலாம். (உ.ம்) மனநோய்க்குத் தரு ம் மருந்து, நீர் மாத்திரை.

  அடிக்கடி காபி குடிப்பது அல்லது இரவில் மது அருந்துவது தூக்கத்தைக் கெடுக்கும். இரவில் மது அருந்துவதை திடீரென்று நிறுத்தினாலும், தூக்கம் தடைபடும்.

பல நோய்களினாலும், தூக்கக் கோளாறு கள் ஏற்படலாம். (உ.ம்) உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத் திணறல், வயிற்றில் புண், இருதய பலவீனம், தைராய்டு தொல்லைகள், உதறுவாதம். ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினால் அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதனால் தூக்கம் குறையும். இரவில் படுப்பதற்குமுன் அதிகமாக காபி, டீ மற்றும் தண்ணீர் குடித்தாலும் தூக்கம் பாதிக்கும்.

தூக்கம் குறைவதால் உடல் சோர்ந்துவிடும். பசி குறையும். அதனால் உண்ணும் உணவின் அளவு குறைய அவருடைய எடையும் குறையும். தலைவலி, தலைபாரம் போன்றவையும் வரலாம். நல்ல தூக்கம் இல்லாதவர்கள், பகலில் மிக்க எரிச்சலுடன் இருப்பார்கள். 

நல்ல தூக்கத்திற்கு உங்கள் ஆலோசனை என்ன?

ஒருவருடைய தூக்கத்திற்கு ஆலோசனையோ அல்லது சிகிச்சையோ அளிப்பதற்கு முன்பு அவருடைய பழக்க வழக்கங்கள் மற்றும் தூங்கும் முறையைப்பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

- படுக்கைக்குச் சென்ற உடனேயே தூக்கம் வருவதற்கு சிரமப்படுவீர்களா? அல்லது நீண்டநேரம் கண் விழித்து இருக்கிறீர்களா?
- பகலில் அதிக தூக்கம் வருவதுபோல் உணருகிறீர்களா?
- இரவில் எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?
- படுக்கைக்குச் சென்றதும் எவ்வளவு நேரம் கழித்து தூக்கம் வருகிறது?
- இரவில் எத்தனை முறை கண் விழிக்கிறீர்கள்?
- தூக்கத்தில் அதிகம் குறட்டை விடும் பழக்கம் உண்டா? அல்லது மூச்சு நின்றுபோய் மறுபடியும் மூச்சு விடும் பழக்கம் உண்டா?
- தூக்கத்தில் நடப்பது அல்லது அதிகமாகக் கத்துவது போன்ற பழக்கங்கள் உண்டா?
- இரவு தூங்கியபின் நீங்கள் புத்துணர்ச்சி யுடன் இருக்கிறீர்களா?

மேற்கண்ட சில கேள்விகளுக்கு உடன் உறங்குபவர் அல்லது அவரை கவனித்துக் கொள்பவர்களால் மட்டுமே சரியான பதில் சொல்ல முடியும்.
மேற்கண்ட சில கேள்விகள் மூலம் ஒருவருடைய தூக்கத்தைப் பற்றிய உண்மை நிலை தெரியவரும். அதற்குத் தகுந்தாற்போல், கீழ்க்கண்ட வழிமுறைகளை (sleep hygine) தவறாமல் பின்பற்றினால், நல்ல உறக்கம் வரும்.

- தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
 - அதேபோல், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கமும் மிகவும் அவசியம்.

- படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்தில் இருக்க வேண்டும்.

- தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரை மற்றும் பானங்களை இரவில் தவிர்க்க வேண்டும்.

(உ.ம்) நீர், மாத்திரை, காபி, டீ, மது, புகைபிடித்தல்,
- மாலையில் செய்யும் உடற்பயிற்சி நல்ல உறக்கத்தை இரவில் ஏற்படுத்தும்.

- பகலில் தூக்கம் 30-40 நிமிடங்கள் போதுமானதே.
- படுக்கும் இடத்தை தூக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே படிப்பது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

- படுத்தவுடன் 30-45 நிமிடங்களில் தூக்கம் வரவல்லையென்றால், படுக்கையை விட்டு எழுந்து சற்று நடந்துவிட்டு வரலாம். அல்லது அடுத்த அறைக்குச் சென்று படிப்பது, வானொலி கேட்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவது நல்லது. தூக்கம் வர ஆரம்பித்த உடனேயே படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்.

- படுப்பதற்கு முன்பு சிறிதளவு வெதுவெதுப்பான பால் அருந்துவது தூக்கத்திற்கு நல்லது.

- மன உளைச்சல்களும், கவலைகளும் தூக்கத்தின் முக்கிய எதிரிகள். அதைத் தவிர்ப்பது மிக்க அவசியம். இதற்கு தியானம் மிகச் சிறந்த   மருந்தாகும். படுக்கைக்குச் செல்லும் முன், முடிந்தால் சற்று வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு, சுமார் அரைமணி நேரம் தியானம் செய்துவிட்டு படுக்கைக்குச் சென்றால், தூக்கம் உங்களை ஆரத்தழுவிக் கொள்ளும்.

தூக்கத்திற்கு நல்ல மாத்திரை ஏதேனும் உண்டா?

நல்ல தூக்கத்திற்கு தூக்க மாத்திரை ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. தூக்க மாத்திரையை தினமும் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும்.
மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். மாத்திரையை திடீரென்று நிறுத்தினால், தூக்கம் பாதிக்கப்படும். தூக்க மாத்திரையினால் ஞாபகசக்தி குறையும், உடல் தடுமாறும், கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகும். பகலில் மயக்க நிலையை ஏற்படுத்தும். ஆகையால், முடிந்த அளவிற்குத் தூக்க மாத்திரையைத் தவிர்ப்பது நல்லது. டாக்டரின் ஆலோ சனையின்படி மன அமைதியைக் கொடுக்கும் மாத்திரை யைச் சாப் பிடுவதனால், கெடுதல் அதிகம் வருவதில்லை.

முதுமையில் நல்ல உறக்கத்திற்கு உங்கள் யோசனை என்ன?
தூக்கமின்மைக்கு நோய்கள் ஏதேனும் காரணமாய் இருந்தால், அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். பகல் தூக்கத்தைக் குறைத்து, மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இரவில் குறைந்த உணவு, படுப்பதற்கு முன்பு தியானம், சிறிது வெதுவெதுப்பான பால், அமைதியான சூழ்நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தி தூங்க முயற்சிக்க வேண்டும். நாளடைவில் நல்ல உறக்கத்தைப் பெற்று, காலையில் புத்துணர்வு அடைய இதுவே சிறந்த வழி.

மருந்தின்றி மலச்சிக்கலைப் போக்க....
நான் முதியோர் மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக லண்டன் அருகிலுள்ள சவுத்ஹாம்ப்டன் மருத்துவமனைக்குச் சென்று ஒரு சில நாட்களே ஆயின. அத்துறையின் பேராசிரியர் வி.ஸி.றி. ஹால் அவர்கள் என்னை முதியோர் மருத்துவப் பிரிவுக்கு அழைத்துக் கொண்டு ஒவ்வொரு நோயாளிகளாக பரிசோதித்து  விளக்கம் கொடுத்துக் கொணடு இருந்தார். அடுத்ததாக சுமார் 80 வயதிருக்கும் ஒரு மூதாட்டியின் அருகில் வரும்பொழுது அவரை கவனித்துக் கொள்ளும் செவிலியர் ‘‘இவர்களுக்கு எப்பொழுதுமே மலச்சிக்கல் உண்டு. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு 5-6 தடவை மலம் கழிக்கிறார்கள்’’ என்று கூறினார். அதற்குப் பேராசிரியர் ‘‘அந்நோயாளிக்கு உடனே ‘எனிமா’ கொடுக்க ஏற்பாடு செய்’’ என்று கூறினார். நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்! அடிக்கடி மலம் செல்பவர்களுக்கு எனிமா ஒரு சிகிச்சை முறையா என்று எண்ணிக்கொண்டு என் அறைக்குச் சென்றேன். அன்று மாலையே அங்குள்ள நூலகத்திற்குச் சென்று படித்ததில் மலம் இறுகிக்கட்டியாகி விட்டால், அந்த அடைப்பிலிருந்து நீர் கசிந்து அடிக்கடி வெளியே வரும். இது பார்ப்பதற்கு வயிற்றுப் போக்கு போல் தெரியும். ஆனால் அது உண்மையில்லை. நாட்பட்ட மலச்சிக்கலே இதற்குக் காரணம். இது போன்ற பல சுவையான தகவல்களை மேலும் தெரிந்து கொள்வோம்.

மலச்சிக்கலை இருவகையாய் வரையறுக் கலாம்.
1. மலம் நாள்தோறும் செல்லும்; ஆனால், இறுகிக் கட்டியாகிச் செல்லும்.
2. மலம் இறுகல் இன்றி சாதாரணமாய் இருக்கும்; ஆனால், இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறைதான் செல்லும்.
மலச்சிக்கலுக்குக் காரணங்கள் யாவை?

1. நார்ச்சத்து மிகுதியாய் உள்ள உணவினைக் குறைவாய் உண்ணுதல்.
2.  குடலில் ஏற்படும் கட்டி, புற்றுநோய், அடைப்பு, நீண்ட காலக் குடலிறக்கம், மூலம் (piles),  குதத்தில் ஏற்படும் வெடிப்பு (fissure)  முதலான நோய்கள், தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பி குறைவாய்ச் சுரத்தல், உடலில் சுண்ணாம்புச் சத்து மிகுதல் (hypercalcaemia),  பொட்டாசியம் குறைதல் (hypokalemia),  மனச்சோர்வு (depression).
 3.  முதியோர் மிகுதியாய்த் தண்ணீர் குடிப்ப தில்லை. அடிக்கடி சிறுநீர் கழித்தலைத் தவிர்க்கவே தண்ணீரைக் குறைவாய்க் குடிப்பர். இந்நிலையைப் பெண்களிடம் மிகுதியாய்க் காணலாம்.

4. மாத்திரைகள்; இரும்புச் சத்து மாத்திரை, கோடின் கலந்த வலி நிவாரணி, அலுமினியம் சேர்ந்த வயிற்று வலி மாத்திரை, சிறுநீர் வெளியேறப் பயன் படுத்தும் மாத்திரை முதலானவற்றை உண்ணல், தூக்க மாத்திரையை மிகுதியாய் உட்கொள்ளுதல்.

5.  போதிய உடற்பயிற்சியின்மை.

6.  கழிவறை சரியாய் இல்லாமையாலும், இடுப்பு, முழங்கால் வலியாலும், முதியோர் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்த்தல்.

மலச்சிக்கலின் தொல்லைகள் என்ன?

மலச்சிக்கலைக் கவனியாமல் விட்டால் பல தொல்லைகள் உண்டாகும். அத்தொல்லை கள் உடலுக்குக் கெடுதல் விளைவிப்பதொடு உயிருக்கும் சில சமயங்களில் ஊறு விளைவிக்கும். ஓரிருநாள் மலச்சிக்கலினால் தொல்லைகள் ஏதும் விளைவதில்லை. பல மாதங்கள், பல ஆண்டுகள் தொடர்ந்து இருந்தால்தான் பல தொல்லைகள் விளையும்.

1. முதியவர் மலச்சிக்கலினால் அவதியுறும் போது நெஞ்சு வலியும், மயக்கமும் வரக்கூடும்.

2. குடல் இறக்கம் (hemia),  கால்களிலுள்ள இரத்தக்குழாய்கள் சுருண்டு பெரியன வாகிவிடும் (varicose veins).
 3.  மலம் சரிவரச் செல்லாமையால் மனத்தில் ஒருவித சொல்ல முடியாத துன்பம், படபடப்பு உண்டாகும்.

4.  கட்டிப்போன மலத்தினால் குதத்தில் விரிசல் ஏற்பட்டு இரத்தக்கசிவு ஏற்படும்.

5.  மலச்சிக்கலால் சில நேரங்களில் திடீ
ரென்று சிறுநீர் அடைப்பு ஏற்படுவதுண்டு
6.  மலம் சிறுகுடலில் தேங்கி நிற்பதாலும் சிறுகுடல் அடைப்பு ஏற்படலாம். (intestinal obstruction)
 7.  மலம் பெருங்குடலில் தேங்கி, முழுமை யாய்ப் பெருடங்குடலை அடைத்துவிடும். அவ்விடத்தில் தேங்கியுள்ள அசுத்த நீர் மட்டும் கசிந்து, கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறும். அது வயிற்றுப் போக்கு போலக் காணப்படும் (spurious diarrhoea).
 8.  மலமிளக்கி மாத்திரைகளைத் தொடர்ந்து உண்ணும் தீய பழக்கம் உண்டாகும்.

மலச்சிக்கலுக்குத் தக்க சிகிச்சை முறை என்ன?

மலச்சிக்கலுக்கு ஏதேனும் நோய் காரணமாயிருந்தால் அந்நோய்க்குரிய சிகிச்சையை முதலில் செய்துகொள்ள வேண்டும். கீழ்க்காணும் முறைகளைக் கடைப்பிடித்தால் முதுமையில் மலச்
சிக்கலைத் தவிர்க்க முடியும்.

1.  ஒரு நாளைக்கு 10 முதல் 15 தம்ளர் (2 - 3 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. நாள்தோறும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
3.  தேவையற்ற மாத்திரைகளை நிறுத்த வேண்டும்.
4.  முக்கியமாய் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருள்களை மிகுதியாய் உண்ண வேண்டும்.          

கேழ்வரகு, கோதுமை, தினை, வரகு, கொள் முதலானவை நார்ச்சத்து மிகுதியாய் உள்ள உணவுகளாகும். தவிட்டிலும் நார்ச்சத்து மிகுதி. நாள்தோறும் 2-4 கரண்டித் தவிட்டைத் தண்ணீரிலோ, பாலிலோ கலந்து குடித்தால் மலச்சிக்கலை எளிதாய்த் தவிர்க்கலாம்.

கீரை, வாழைத்தண்டு, முட்டைகோஸ், காலிபிளவர், புடலங்காய், பாகற்காய் முதலாய காய்களிலும், பேரீச்சம்பழம், அத்திப்பழம், மாம்பழம் முதலிய பழங்களிலும் நார்ச்சத்து மிகுதியாயுள்ளது. வாழைப்பழம் மலச்சிக்கலுக்கு மிக நல்லது என்று எல்லோரும் எண்ணுகின்றனர். ஆனால், அதில் நார்ச்சத்து மிகவும் குறைவே (0.45%). அப்பழத்தில் மாவுச்சத்து மிகுதி. அதுவே மலத்தைப் பருக்க வைத்து இளக்கி விடுகிறது. மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் வற்றல் போன்ற பொருள்களிலும் நார்ச்சத்து மிகுதியாய் உள்ளது.

இம்முறைகளால் பலனில்லை என்றால், மலமிளக்கி மாத்திரைகளை இடைவிட்டோ, தொடர்ந்தோ முதியவர் உண்ணலாம். ஆனால், மருத்துவர்  ஆலோசனை பெற்று அம்மாத்திரைகளை உண்ணுதல் நல்லது. நோயுற்ற முதியவர், மிக வயதான முதியவர் எனிமாவை மேற்கொண்டோ, மலமிளக்கி மாத்திரைகளை ஆசனவாயில் நுழைத்தோ மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம். ஆனால், முடிந்த அளவிற்கு இவற்றை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளாமலிருத்தல் நல்லது.

தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, சற்று அதிக தண்ணீர், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் மற்றும் பழங்கள் மூலம் மலச்சிக்கலை மருந்தின்றி போக்கலாம்.

1 comment: